பழங்குடியினர் மக்களுக்கு புத்தாண்டு பரிசுகள் – இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் நலத்திட்ட உதவி

திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில், அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வழங்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகம் கூலித்துறைப்பட்டி நந்திபுரம் பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் மக்களை இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் நேரில் சந்தித்து உதவிகள் வழங்கப்பட்டது.அப்பகுதியில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 26 கிலோ அரிசி மூட்டைகள், ஐந்து கிலோ கோதுமை மாவு, மளிகைப் பொருட்கள், வேஷ்டி, சட்டை, புடவைகள், குழந்தைகளுக்கான துணிகள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.

மேலும், அப்பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர போதிய வாகன வசதி இல்லை என்பதை அறிந்த இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்காக வாகனம் வாங்கித் தருவதாக உறுதி அளித்தது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிகழ்வில், இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திராசுந்தரம், செயலாளர் ராஜா முகமது, வனத்துறை அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில், பழங்குடியினர் மக்களுடன் இணைந்து கேக் வெட்டி வாழ்த்துக்களை பகிர்ந்து, ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சமூக சேவை, பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.



Post Comment