ராயபுரம் எஸ்டிபிஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம்
சென்னை ராயபுரம், இப்ராஹிம் சாகிப் சாலையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ மாநில தலைமையகத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகப் பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.
தகவலின்படி, அலுவலகத்தின் கீழ்தள சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த குளிர்சாதன (ஏசி) இயந்திரத்தை இயக்கிவிட்டு மேல்தளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஏசியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து, அருகில் இருந்த பெயிண்ட் பொருட்களுக்கும் பரவி அறை முழுவதும் தீ பரவியது.
இந்த தீ விபத்தில் 1கணினி, நான்கு சோபாக்கள், பத்து நாற்காலிகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பீரோ மற்றும் முக்கிய தஸ்தாவேஜ்கள் உள்ளிட்ட அலுவலகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்தை கண்ட எஸ்டிபிஐ நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்ததுடன், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ராயபுரம் மற்றும் உயர்நீதிமன்ற தீயணைப்பு நிலையங்களிலிருந்து நிலைய அலுவலர்கள் ராஜ்குமார் மற்றும் கருணாநிதி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படாதது அதிர்ஷ்டவசமானதாகும். இருப்பினும் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் தொடர்பாக பி-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக எஸ்டிபிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



Post Comment