Loading Now

Breaking

ஈரோடு–பழனி ரயில்வே திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்: கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு–பழனி ரயில்வே திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்றும் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் தொடக்கத்தில், அமைப்பின் செயல் தலைவர் சிவசங்கரின் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமானவர் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியதையொட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வரும் 17.08.2026 அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தாராபுரம் நகரில் ஐந்து இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தாலுக்கா அலுவலகம் முன்பு, ஐந்துமுக்கு, வடதாரை, பேருந்து நிலையம் மற்றும் அண்ணா சிலை பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், ஏழை எளிய மக்கள், முதியோர், பொதுமக்கள், வியாபாரிகள், தினக்கூலி தொழிலாளர்கள், குறு மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் குறைந்த செலவில் விரைவாக பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு–பழனி ரயில்வே திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனைத்து ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், குறிப்பாக பொள்ளாச்சி–கரூர் ரயில்பாதை திட்டத்தையும் தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் செயல் தலைவர் சிவசங்கர், தலைவர் தனபால், செயலாளர் நார்திக சிதம்பரம், அமைப்பு தகவல் செய்தியாளர் மோகன்ராஜ், துணைத் தலைவர் சாகா ரஷீத், உதவிச் செயலாளர்கள் ரங்கசாமி, பாடகர் ரமேஷ், ப. மணி, செயற்குழு உறுப்பினர் பவுல்ராஜ், கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed