Loading Now

திருவொற்றியூரில் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம்; முதல்வர் விஜய்க்கு விமர்சனம்…

சென்னை: சென்னை திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோயிலில் இன்று முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் ஏற்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய அவர், பொதுமக்களுக்கு கேசரி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரையை விமர்சித்தார். “தன்னை முதல்வர் என்பதை மறந்து, எதிர்க்கட்சி தலைவரைப் போல திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி என மீண்டும் மீண்டும் பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

மேலும், “பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணமாக கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளே இருந்தன. ஆனால் தற்போதைய ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ‘சிங்கப்பெண்’ திட்டம் தொடங்கப்பட்டாலும் அதனால் எந்தவித பயனும் ஏற்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசிய அவர், “உலகளவில் நடைபெற்று வந்த போர்களே விலை உயர்வுக்கு காரணமாக இருந்தன. தற்போது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும். இந்தியாவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலை குறைவாகவே உள்ளது” என்றார்.

தொடர்ந்து, “முதல்வர் தன்னை முதல்வராக உணர்ந்து, மாநில நிர்வாகத்தில் முழுமையாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர் ஆட்சியை முழுமையாக சார்ஜ் எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவர் ஜெய்கணேஷ், மண்டலத் தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Share this content:

Post Comment

You May Have Missed