வேளாங்கண்ணி பேராலயம் அக்.3 முதல் நாள் முழுவதும் திறப்பு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதற்காக தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை பேராலயம் திறந்து இருக்கும். இதனால் இரவில் வேளாங்கண்ணி வரும் பக்தர்கள் அங்கேயே அறை எடுத்து தங்கியிருந்து மறுநாள் காலையில் மாதாவை தரிசிக்க வேண்டியநிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அக்.3-ம் தேதி முதல் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அன்னையின் அருளைப் பெற வரும் பக்தர்கள் எந்த நேரத்திலும் வழிபடும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கமுடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு வேளாங்கண்ணி அன்னையின் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.