மடப்புரம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் திருப்பம்: டிஎஸ்பி உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமை காவலரை சிறையில் அடைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார் (27). கடந்த 2025 ஜூன் 27-ம் தேதி மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் தனிப்படை போலீஸார் அஜித்குமாரை கோயிலுக்குப் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் கட்டி வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தனிப்படை காவலர்கள் ராஜா, ஆனந்த், சங்கரமணிகண்டன், பிரபு, கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதான தனிப்படை காவலர்கள் 6 பேர் மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேர் மீது மதுரை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்னிலையில் நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக தனிப்படை காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராகினர். 10 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரை காவலில் அடைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்த உத்தரவை அவர்களுக்கு ஜாமீன் வழங்கும் உத்தரவாகக் கருத முடியாது. இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கும் குற்றமாகும்.
சிபிஐ தரப்பில், டிஎஸ்பி மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் தற்போதும் பணியில் உள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கான பாதுகாப்பை தற்போதைய காவல் ஆய்வாளர் திரும்பப் பெற்றுள்ளார். இதனால் டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரையும் சிறையில் அடைத்தால் மட்டுமே விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும். இதனால் வழக்கு முடியும் வரை 4 பேரையும் சிறையில் அடைக்க வேண்டும்.
அரசு தரப்பு கூற்றுப்படி அனைத்து எதிரிகளும் சேர்ந்து அஜித்குமாரை சட்டவிரோதமாக காவலில் எடுத்து தாக்கி சித்ரவதை செய்து மரணத்தை ஏற்படுத்தியதுடன், காவல் நிலைய அதிகாரப்பூர்வ பதிவுகளில் பொய்யான பதிவுகளையும், ஆவணங்களையும் உருவாக்கி குற்றத்தை மறைக்க முயன்றுள்ளனர். மேலும் உயிரிழந்தவரின் பெற்றோருடன் சமரசம் செய்து கொள்ள உள்ளூர் அரசியல் கட்சி உறுப்பினர்களின் உதவியுடன் டிஎஸ்பி முயன்றதாகவும் அரசு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தற்போதைய சூழலில் டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரும் சிறைக்காவலுக்கு வெளியே இருப்பது, சாட்சிகளை கலைத்தல், ஆதாரங்களை சிதைத்தல் போன்ற செயல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் உள்ளது. எனவே, டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேரையும் செப்.16 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.