Loading Now

பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் விநாயகர் சிலைகள்!

தருமபுரி, செப்.04.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் களிமண்ணுக்கு உயிர் கொடுத்து, விநாயகரின் பல்வேறு அழகிய வடிவங்களை உருவாக்கி வருகின்றனர்.

சிறிய அளவிலான சிலைகள் முதல் 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சிலைகள் வரை பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, ரசாயனப் பொருட்களை தவிர்த்து கிழங்கு மாவு, காகிதம் மற்றும் இயற்கைக்கு உகந்த வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கும்போதும் தண்ணீர் மாசுபடாத வகையில் இயற்கை முறையில் சிலைகள் உருவாக்கப்படுவதாக தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்தனர்.

பாலக்கோட்டில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் அழகிய விநாயகர் சிலைகள் தற்போது பாலக்கோட்டின் முக்கிய கவன ஈர்ப்பாக மாறியுள்ளன.

The post பெண்களின் கைவண்ணத்தில் உருவாகும் விநாயகர் சிலைகள்! appeared first on தின தமிழ்.

Share this content:

You May Have Missed