டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் அபராதம்- புலம்பும் பொதுமக்கள்!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு வில் இருந்து குமனந்தொழு செல்லும் பாதையில் அரசு மதுபான கடையும்,மயிலாடும்பாறை செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான மன மகிழ் மன்றமும் செயல்பட்டு வருகிறது. இதில் இரவு நேரம் டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்கும் மது பிரியர்களை காவல்துறையினர் குறி வைத்து பிடிப்பதாக மதுப்பிரியர்கள் புலம்புகின்றனர்..
இந்த டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி விட்டு வாகனங்களில் வெளியே வரும் நபர்களை, குடிபோதையில் வாகனம் ஓட்டுக்கிறார்கள் என்ற கோணத்திலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களை போலீசார் உடனடியாகத் தடுத்து டாஸ்மாக் கடை அருகிலேயே நிறுத்தி வழக்குப் பதிவு செய்து, ₹12,000 வரை அபராதம் விதிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தனியார் மனமகிழ் மன்றங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்…
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தவறுதான். அதற்கெதிராகப் போலீசார் நடவடிக்கை எடுப்பதும் அவசியமானது. ஆனால், நெடுஞ்சாலைகள் மற்றும் விபத்து அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொள்வதற்குப் பதிலாக, அரசு மதுபானக் கடை வெளியே காத்துக் கிடந்து, வெளியே வரும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது,” என வேதனையுடன் தெரிவித்தனர் .
சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றாலும், பொதுமக்களுக்குத் தேவையற்ற சிரமம் ஏற்படாத வகையில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர் .
எனவே, தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அருகே மேற்கொள்ளப்படும் வாகன சோதனைகள் குறித்து மாவட்ட காவல் நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது .
Post Comment