

விராட் கோலி ஃபார்மை மீட்டெடுக்க திணறுவது ஏன்? – இது அனில் கும்ப்ளே பார்வை
“விராட் கோலி கூடுதலாக முயற்சி எடுத்து ஆடுகிறார். எனவேதான் அவரால் ஃபார்மை மீட்டெடுக்க முடியவில்லை” என்று இந்திய முன்னாள் கேப்டனும், கோலியினால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பையில் அபாரமாக ஆடிய பிறகே விராட் கோலி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வெறும் 137 ரன்களையே எடுத்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 38 பந்துகளில் வலி நிறைந்த 22 ரன்களை எடுத்து விட்டு ரிஷாத் ஹுசைன் என்ற லெக் ஸ்பின்னரின் ஃபுல் லெந்த் பந்தை பின் காலில் சென்று ஆடி லேட் கட்டில் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விராட் கோலி கடந்த 6 இன்னிங்ஸ்களில் 6 முறையும் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்துள்ளார். அதுவும் 5 முறை லெக் ஸ்பின்னரிடம். இந்நிலையில், கிரிக் இன்போ தளத்தில் பேசிய அனில் கும்ப்ளே கூறும்போது, “கடும் தாழ்வில் இருக்கிறார் விராட் கோலி. குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் நினைத்த அளவுக்கு அவரால் நீண்ட காலம் சீரான முறையில் ஆட முடியவில்லை. அவர் கடுமையாக முயற்சி செய்கிறார் என்றுதான் எனக்குப்படுகிறது. அனைவரும் அவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றுபவர், அவர்தான் இந்திய அணியில் முக்கியமானவர் என்று பேசும்போது அவர் தன் மேலேயே அதிக அழுத்தத்தை எற்றிக் கொள்கிறார். இப்படியாக எல்லா அழுத்தத்தங்களையும் தன்னகப்படுத்திக் கொள்கிறார். இதனால் ரிலாக்ஸ் ஆக ஆட முடிவதில்லை. தன்னுடைய சிறந்த இன்னிங்ஸைக் கூட அவரால் நினைத்துப் பார்த்து ஃபார்மை மீட்க முடியாமல் போகிறது. கூடுதலாக கடினமாக முயற்சி செய்கிறார், அவரது இன்னிங்ஸை பார்த்தாலே இது நமக்குப் புரிகிறது. ரோஹித் சர்மா சுதந்திரமாக ஆடுகிறார். ஏனெனில், பின்னால் நிறைய பேட்டிங் இருக்கிறது, அனைவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர்.
Post Comment