

புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன
புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று அமலுக்கு வந்தன. நாட்டின் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரிலும், தமிழகத்தின் முதல் வழக்கு சென்னையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகியவற்றுக்கு பதிலாக, நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதாக்கள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. இதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதிநியம் ஆகிய 3 சட்டங்கள் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியபோது, ‘‘இந்த சட்டங்களில் தண்டனைக்கு பதில் நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தாமதமின்றி விரைவாக விசாரணை நடத்தி விரைவாக நீதி வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
புதுடெல்லி ரயில் நிலையம் அருகே சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக தெருவோர கடைக்காரர் மீது புதிய சட்டத்தின் கீழ் (பாரதிய நியாய சன்ஹிதா) முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஊடகங்களில் நேற்று காலை செய்தி வெளியானது. இதை மறுத்த அமித் ஷா, ‘‘அது தவறான தகவல். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பைக் திருடு போனது தொடர்பாக, அதிகாலை 12.10 மணிக்கு பதிவானதுதான் முதல் வழக்கு’’ என்றார்.
Post Comment