

கொடுங்கையூர்குப்பைஎரிஉலைதிட்டத்தைகண்டித்துஅதிமுகஆர்ப்பாட்டம்
சென்னை: வட சென்னை கொடுங்கையூரில் செயல்படுத்த உள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் தண்டையார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினருக்கான மயான பூமி திட்டத்தை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். வடசென்னை,கொடுங்கையூரில் குப்பை எரிஉலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கொடுங்கையூர் – மணலி சாலை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் தண்டையார்பேட்டை அஞ்சலம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மகளரிணி மாநில செயலாளர் பா.வளர்மதி தலைமையில், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில, திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.வளர்மதி, “வட சென்னையை விஷ நகரமாக்கும் வகையில் கொண்டுவரப்பட உள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை திமுக அரசும், மாநகராட்சியும் திரும்பப் பெற வேண்டும். திமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான திட்டங்களே செயல்படுத்தப்படுகின்றன.
திமுக ஆட்சியில் தொடர் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் தான் உள்ளன. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. காலம் மாறும், காட்சிகள் மாறலாம். அப்போது திமுக அரசு பதில் சொல்லும் காலம் வரும்” என்றார்.
Post Comment