

லஞ்ச வழக்கில் சிக்கிய துணை தாசில்தார் தப்பி ஓட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க 20000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுபெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வெங்கடாஜலபதி நகரில் கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று வழங்க அதன் மேலாளர் துரைராஜிடம், துணை தாசில்தார் பழனியப்பன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விருப்பமில்லாத துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி துரைராஜ், ரூ.20 ஆயிரம் பணத்தை பழனியப்பனிடம் கொடுத்தார். அந்த பணத்தை, வாங்கி வைக்குமாறு அங்கிருந்த கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியை பழனியப்பன் அறிவுறுத்தினார். இதனையடுத்து நல்லுசாமி பணத்தை வாங்கினார்.இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது துணை தாசில்தார் பழனியப்பன் தனக்கு இதயம் படபடப்பாக இருப்பதாகவும் மருத்துவமனையில் சேர்க்குமாறும் கேட்டுக் கொண்டதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விஏஓ நல்லுசாமியை மட்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனியப்பன் இன்று (ஜூலை 02) அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்த பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனியப்பனை தேடி வருகின்றனர்.மாவட்ட உயரதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, பழனியப்பன் மீது கரிசனம் காட்டுமாறு கூறியதைத் தொடர்ந்தே மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Post Comment