

ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வேளாங்கண்ணியில் பறிமுதல்: இலங்கைக்கு கடத்த முயற்சி
நாகப்பட்டினம்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருளை வேளாங்கண்ணியில் க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றினர். காரில் ரகசிய அறை அமைத்து கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்த இருப்பதாக நாகை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஆய்வாளர் ராமச்சந்திர பூபதி தலைமையிலான க்யூ பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் (ஜூன் 13) இரவு தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் ஓர் அறையில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் தெரியவந்த தகவல்கள் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: விடுதியில் இருந்த இருவரும் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் கியாபரி பகுதியை சேர்ந்த தில்குமார் தாபாமங்கர்(34), கவாஸ்(36). மேற்கு வங்கத்தில் இருந்து ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு ஹசீஸ் போதைப் பொருளை கடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக காரில் ரகசிய அறை அமைத்து 75 கிலோ ஹசீஸ் போதைப் பொருளை மறைத்து வைத்துக்கொண்டு, மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.
காரில் 1,500 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்ததால், வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கிவிட்டு, 14-ம் தேதி (நேற்று) ராமேசுவரம் சென்று,படகு மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர்.
அவர்கள் 2 பேரையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். 75 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.150 கோடி ஆகும்.இவர்களுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர்தான் செல்போன் வழியாக வழித்தடம் (‘ரூட் மேப்’) போட்டு கொடுத்துள்ளார். அவரை பிடிக்க தஞ்சையில் இருந்து போலீஸார் தேனி மாவட்டம் விரைந்துள்ளனர்.
Post Comment