Loading Now

சென்னை – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 மாதங்களில் 200 சிறார்கள் மீட்பு

கடந்த 13 மாதங்களில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்த 200 சிறார்களை ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டுள்ளனர்.

ரயில் நிலையங்கள், ரயில்களில் பெண்கள், குழந்தைகள், சிறுமியர்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. இதற்காக, ரயில் நிலையங்களில் குழந்தைகள் மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த மையத்துடன் ஆர்.பி.எஃப் போலீஸார், தமிழக ரயில்வே போலீஸார் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் நிலையத்துக்கு தினமும் சுமார் 4 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பெண் பயணிகள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய, தெற்கு ரயில்வே ஆர்.பி.எஃப். ஐஜி ஈஸ்வர ராவ், ஆர்.பி.எஃப் கூடுதல் கோட்ட மேலாளர் ராம கிருஷ்ணன் ஆகியோர் வழிகாட்டுதல்படி, ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் மதுசூதன ரெட்டி தலைமையில் ஆர்.பி.எஃப் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவிக்கும் சிறார்கள் போலீஸாரால் மீட்கப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் ஏப்ரல் வரை 13 மாதங்களில் சுமார் 200 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் குழந்தைகள் உதவி குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

இது குறித்து, ஆர்.பி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: வறுமையால் வேலை தேடி வருதல், பெற்றோர்களி டம் கோபம், ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற விருப்பம், பருவக்காதல் இப்படி பல காரணங்களால், சிறுவர் சிறுமியர் வீட்டை விட்டு வெளியேறி, ரயிலில் ஏறி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகின்றனர். அங்கிருந்து எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்கும்போது, மீட்கப்படுகின்றனர்.

இவர்களில் குழந்தை தொழிலாளர்களும் உண்டு. மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நல குழு மூலமாக விசாரிக்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் சிறார்கள் தொடர்பாக உதவி எண் 139 மூலமாக பயணிகள், பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றனர்.

Share this content:

Previous post

கிலோ கஞ்சா கடத்தல்: ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை சர்க்கார் விரைவு ரயிலில் 8

Next post

மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களுக்கு நெட்வொர்க் சார்ஜ் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

Post Comment

You May Have Missed