Loading Now

“கமல்ஹாசன் கன்னடர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” – கர்நாடக பாஜக

பெங்களூரு: கன்னட மக்களிடம் நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

‘தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது’ என கமல் கூறியிருந்த நிலையில், அதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான விஜயேந்திர எடியூரப்பாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம்.

இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது. கன்னடம் உலகில் மிகவும் மதிக்கப்படும் மொழி என்பதை கமல்ஹாசன் போன்ற குறுகிய மனப்பான்மை கொண்ட, மதவெறிபிடித்த நபர்கள் குறைந்தபட்சம் புரிந்துகொள்ள வேண்டும். கன்னட படங்களிலும் நடித்த கமல்ஹாசன், கன்னட மக்களின் தாராள மனப்பான்மையை மறந்துவிட்டு, தனது நன்றியற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியாவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக இந்து மதத்தையும் மத உணர்வுகளையும் தொடர்ந்து அவமதித்து வருகிறார். தற்போது, ​​6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையைப் புண்படுத்துவதன் மூலம் கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னடர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்.

எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுக்கக்கூடிய வரலாற்றாசிரியர் கமல்ஹாசன் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது. கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ததில்லை என்பதை ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசன் நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன?: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார்.

ஆனால் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்‌ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கூறும்போது, “தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?

இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். நீங்கள் தப்பிவிட்டீர்கள். கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களிலும் கன்னட அமைப்புகளை சேர்ந்த பலர் கமல்ஹாசனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this content:

You May Have Missed