

உதட்டு வீக்கத்துக்காக சென்ற சிறுவனின் மர்ம உறுப்பில் ஆபரேஷன்: மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
சென்னை: உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெற சென்ற சிறுவனின் ஆண் குறியில் ஆபரேஷன் செய்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் செவிலியரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்காக 9 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு மருத்துவரும், செவிலியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போதுதான் அந்த சிறுவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக ஆண் உறுப்பில் ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிறுவன் தனது பெற்றோரிடம் அதை காண்பித்து கதறி அழுதான். உடனே பெற்றோரும், உறவினர்களும் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட மருத்துவமனை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஐஸ்அவுஸ் போலீஸார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று நேற்று விசாரணை நடத்தினர். ஆபரேசன் செய்த மருத்துவரிடம் விசாரித்தபோது, அவர் தான் சரியான ஆபரேசனை செய்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மர்ம உறுப்பில் ஏன் ஆபரேஷன் செய்தார் என்பது கேள்விக்குறியானது.
ஆபரேசனுக்கு உறுதுணையாக இருந்த செவிலியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஐஸ்அவுஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து மருத்துவர், செவிலியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
Post Comment