Loading Now

இஸ்ரேல் – ஈரான் மோதல் மூன்றாம் உலக போராக மாறுமா?

image இஸ்ரேல் - ஈரான் மோதல் மூன்றாம் உலக போராக மாறுமா?

ஜெருசலேம்: ஒரு பக்கம் உக்ரைன் – ரஷ்யா போர் நடந்து வருகிறது; மறுபக்கம், மேற்காசியாவில் கொந்தளிப்பான சூழ்நிலை உள்ளது. இவை மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதற்கான போட்டி தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது. ஒரு பக்கம் அமெரிக்காவும், மற்றொரு பக்கம் ரஷ்யா மற்றும் சீனாவும் தங்களை உலகின் அதிகாரமிக்க நாடுகளாக காட்டி வருகின்றன. இதற்கு அவர்களுக்கு உள்ள படைபலம், பொருளாதாரம் உள்ளிட்டவை சாதகமாக உள்ளன.

image-2 இஸ்ரேல் - ஈரான் மோதல் மூன்றாம் உலக போராக மாறுமா?

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் நடந்து வருகிறது. இதனால், உலகெங்கும் பொருட்களுக்கான வினியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன.

ஹமாஸ் ஆட்சி


மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்த பிரச்னைதான்; தற்போது பெரிதாகியுள்ளது. இஸ்ரேல் — பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலமாக உள்ளது. காசா, மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை, தனி பாலஸ்தீன நாடாக அறிவிக்க வேண்டும் என்பது, பாலஸ்தீன போராட்டத்தின் நோக்கம். ஆனால், இந்தப் பகுதிகளை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றி, அதன் ஆட்சி நடக்கிறது.

கடந்தாண்டு அக்., 7ல், இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் துவங்கியது. தற்போது ஓராண்டை எட்ட உள்ளது. யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள காசா பகுதிக்கும் இடையேயான இந்தப் போர், மதத்தின் பின்னணியைக் கொண்டது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, அண்டை நாடான லெபனானை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு உள்ளது. இஸ்ரேலை அது தொடர்ந்து சீண்டி பார்த்து வந்தது.

இதனால், ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. லெபனானுக்குள் நுழையாமலேயே தன் தாக்குதல்களை நடத்தியது. ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளின், பேஜர் எனப்படும் தகவல் பரிமாறும் சாதனங்களை வெடிக்கச் செய்தது. மேலும், ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட முக்கிய தளபதிகளை துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொன்று குவித்தது.

ஹெஸ்பொல்லா அமைப்புக்கு ஈரானின் ஆதரவு உள்ளது. இதைத் தவிர, அந்தப் பிராந்தியத்தில் இருந்து செயல்படும் பல முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களை துாண்டி விட்டு வருகிறது ஈரான். இஸ்ரேல் – ஈரான் இடையே மறைமுகப் போர் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இரண்டும் அண்டை நாடுகள் இல்லை என்பதால், பிரச்னை பெரிய அளவுக்கு தீவிரமாக இல்லாமல் இருந்தது.

ஹெஸ்பொல்லா தலைவர் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில், தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஒரே நாளில், 180 ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இது உலகெங்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் மேலும் விரிவடையுமா, மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில், மூன்றாம் உலகப் போர் என்பது தற்போது பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2 லட்சம் பேர் உட்பட உலகெங்கும் மூன்று லட்சம் பேர், சில மணி நேரங்களில் இது தொடர்பாக நேற்று பதிவிட்டுள்ளனர். தற்போதைய நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்கா, மேற்காசியாவில் உள்ள சவுதி அரேபியா உள்ளிட்டவற்றின் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், ஈரானுக்கு, ரஷ்யாவின் ஆதரவு உள்ளது. தற்போதுள்ள மோதல் உலகப் போராக மாறினால், ஈரானுக்கு, சீனாவும், வடகொரியாவும் ஆதரவு அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Share this content:

Post Comment

You May Have Missed