

குழந்தைகளுக்குகாய்ச்சியபால்விநியோகம்: திருச்செந்தூரில்அமைச்சர்பி.கே.சேகர்பாபுதொடங்கிவைத்தார்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் 10 கோயில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை திருச்செந்தூரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, ‘கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் காய்ச்சிய பால் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் சி.பழனி முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திட்டத்தை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர்களிடம் காய்ச்சிய பால் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 10 திருக்கோயில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு தினசரி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தற்போது திருச்செந்தூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆகிய திருக்கோயில்களில் இன்று முதல் (நேற்று) இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, காய்ச்சிய பால் வழங்கப்படுகிறது. இதற்கான செலவு ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம் கோயிலுக்கு அழைத்து வரப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கோயில் தக்கார் ஆர்.அருள்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் எம்.அன்புமணி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Post Comment