

ஈரோடு | போலி செயலி மூலம் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.45.58 லட்சம் மோசடி..!
ஈரோடு காசிபாளையத்தில் வங்கியில் (எஸ்பிஐ) மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாஸ்கர் (63) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் தனது சேமிப்பு பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்து தனியார் பங்கு சந்தை சார்ந்த செயலி மூலம் டிரேடிங் கணக்கை தொடங்கி 45 லட்சத்து 58 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளார். இதையடுத்து சில நாட்களிலேயே கணக்கில் இருந்த பணம் பறிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் பாஸ்கர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பாஸ்கரிடம் போலி செயலி மூலம் பணத்தை பெற்று மோசடி செய்யப்பட்ட 45.58 லட்சம் பணம் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கிக் கணக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வடமாநில வங்கிக் கணக்குகளில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில், அந்த வங்கிக் கணக்கு வைத்திருந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்கி என்பவரை சைபர் க்ரைம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ராம்கி அளித்த தகவலின் பேரில், ஈரோடு ரங்கம்பாளையத்தில் தங்கியிருந்த எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டரான திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் (38) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சங்கர் அளித்த தகவலின்பேரில் ஈரோட்டைச் சேர்ந்த தற்போது துபாயில் இருக்கும் பிரதீப் வீட்டில் சோதனை நடத்தி ஒரு லட்சம் ரொக்கத்தை கைப்பற்றி சைபர் க்ரைம் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
Post Comment