Loading Now

மதுராந்தகத்தில் கணிதா சம்பத், தாராபுரத்தில் பானுமதி: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 6.10.2026 அன்று நடைபெற உள்ள, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், (35) மதுராந்தகம் (தனி), திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், (101) தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதியில் மு.பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.

அதன்படி மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த தொகுதிகளில் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this content:

You May Have Missed